ஆலயத்துக்குள் பிக்குகள் பிரவேசிக்கின்றமையைத் தடுக்கும் வகையில் கலவரம் அடக்கும் பொலிஸார் அச்சுற்றாடலில் குவிக்கப்பட்டு உள்ளார்கள்.
பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டமையை அடுத்து சீற்றம் அடைந்திருக்கும் இப்பிக்குகள் இவ்வேள்வியை தடுத்து நிறுத்தும் வரை அங்கிருந்து செல்லமாட்டார்கள் என்று அடம்பிடித்து வீதியில் உட்கார்ந்து இருக்கின்றார்கள்.
இன்று ஆடுகள் சுமார் 300 உட்பட ஏராளமான மிருகங்கள் இவ்வாலயத்தில் பலி கொடுக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது
பின்பு .........................
பிக்குகளின் கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் மிருக பலி நடந்தது!
இலங்கையின் சிலாபம் பகுதியில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் பிக்குமாரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மிருக பலிச் சடங்கு நடந்து முடிந்துள்ளது.
இந்தச் சடங்கை நடத்தக் கூடாது என்று அகில இலங்கை பிக்குமார் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்து இன்று சிலாபம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், அந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரால் தடுக்கப்பட்டது. இந்த மிருக பலிச் சடங்கு பல காலமாக நடந்து வருவதாக கூறிய ஒரு ஆலய நிர்வாகி, உள்ளூர் மக்கள் இந்த சடங்குக்கு மிகுந்த ஆதரவைத் தந்ததாகவும், கூறினார்.
அது மாத்திரமின்றி அனைத்து மத மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மிருக பலிச் சடங்கை அகில இலங்கை இந்து மாமன்றம் என்னும் அமைப்பும் கண்டித்திருந்தது.
ஆனால், இன்று ஆலயத்தின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பேச்சியம்மன் சிலைக்கு முன்பாக பக்தர்களால், மூன்று ஆடுகளும் சுமார் 7 கோழிகளும் பலியிடப்பட்டு, அவை அங்கேயே சமைக்கப்பட்டு வந்திருந்த அனைத்து இனமக்களுக்கும் பகிரப்பட்டதாக ஆலய நிர்வாகி தெரிவித்தார்.